Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12-ம்வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும் பிளஸ் 2 தேர்வு குறித்து சூழலுக்கேற்ப அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, செயலர்காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பிளஸ் 2 தேர்வைரத்து செய்வதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு இறுதி முடிவு எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லை. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர், பள்ளிநிர்வாகங்கள், கல்வியாளர்கள் என்று அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்டு 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்கள் கருத்துகளைtnschooledu21@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பள்ளிக்கல்வியின் ‘14417’என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் கருத்துகளை கூறலாம்.
அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் இந்த விவகாரத்தில் முதல்வர் இறுதி முடிவு எடுப்பார். மாணவர்களின் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை இணையவழியாக இன்று (ஜூன் 3) தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மாணவர்கள், பெற்றோரின் கருத்துகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், மற்றவர்களின் கருத்துகளை இணைய வழியிலும் கேட்டறிந்தும் அதன் விவரத்தை தொகுத்து அறிக்கையாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT