Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு - 10.5% உள்ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

எனவே, அதை செயல்படுத்துவது என்ற அடுத்தகட்டத்துக்கு எங்களால் செல்ல முடியாது என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்துசென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள போதிலும், அவற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

முதல்வர் தலையிட வேண்டும்

அவ்வாறு இருக்கும்போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுப்பது சட்டத்தையும், சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தவறுகளை களைய வேண்டும்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு10.5சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக இதுவரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரு அறிவிக்கைகளையும் திரும்பப் பெற்று,வன்னியர் இட ஒதுக்கீட்டையும் சேர்த்து புதிய அறிவிக்கைகளை வெளியிட வேண்டும்.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்துவதற்கு மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x