Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM
திருவள்ளூர் மாவட்டம் ‘வாய்ஸ் ஆஃப் நேச்சர்’ என்ற அமைப்பின் தலைவர் ஆர்.கோகுல்ராஜ் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "திருவள்ளூர் மாவட்டம் காக்களூர்பகுதியில் இயங்கி வரும் சிட்கோ தொழில்பேட்டையில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அருகில் உள்ள தண்ணீர் குளம் ஏரியில் விடப்படுகிறது. அதனால் அந்த ஏரி மாசடைகிறது. இதை தடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த அமர்வின் உத்தரவின்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியஆய்வில், 35 தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை குழாய் வழியாக வெளியேற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிட்கோ நிர்வாகம் 6 மாதங்களுக்குள் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காவிட்டால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சிட்கோ நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கலாம். இப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்அவ்வப்போது சிட்கோவில் ஆய்வு செய்து,விதிமீறல் ஏதேனும் கண்டறியப்பட்டால்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT