Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

நாடு முழுவதும் இந்த ஆண்டில் - தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவு பெய்யும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவ காலத்தில் நாட்டில் கிடைக்கும் மழை அளவு தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் ஜூன் 1-ம் தேதிமுதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலகட்டம் தென்மேற்குபருவ காலமாக கணக்கிடப்படுகிறது. இந்த காலகட்டத்தில், கடந்த1961-ம் ஆண்டு முதல் 2010-ம்ஆண்டு வரை பதிவான மழை அளவின்படி, ஆண்டுக்கு சராசரியாக 88 செ.மீ. மழை கிடைக்கிறது. இதுவே தென்மேற்கு பருவ காலத்தில் பெய்யும் வழக்கமான அளவாக கணக்கிடப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவே பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய பகுதிகளில் மழை அளவு 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை இருக்கக் கூடும். நாடு முழுவதும் மானாவாரி நிலப் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 நாட்கள் மழை வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கான மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வெப்பச் சலனம், உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜூன் 2-ம் தேதி (இன்று) தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

3, 4-ம் தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். 5-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15 மாவட்டங்களில் வெப்பம் உயரும்

அடுத்த 2 நாட்களுக்கு மதுரை,திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும். சென்னையில் பகல் நேரத்தில் வானம் தெளிவாகவும், மாலை, இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

ஜூன் 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 5 செ.மீ., தருமபுரி மாவட்டம்அரூரில் 4 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x