Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்து - ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள 13 யானைகள் : � 25 கிராமங்களில் வனத்துறை எச்சரிக்கை

கர்நாடகாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள 4 குட்டி யானைகள் உட்பட 13 யானைகளையும் கண்காணித்து பாதுகாப்பு பணியில்ஈடுபட மாவட்ட வனத்துறை சார்பில் 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வனத்தை ஒட்டியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலி பெருக்கி மூலமாக எச்சரிக்கும் பணியையும் மாவட்ட வனத்துறை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கர்நாடகா வனத்திலிருந்து வெளியேறிய 13 யானைகள் தமிழக எல்லையான பேரிகை அருகே கரியணப்பள்ளி மற்றும் காருபெல்லா கிராமங்களை கடந்து கும்பளம் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள ஓசூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள கிராமமக்களும், விவசாயிகளும், யானைகளின் கூட்டத்தை மீண்டும் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட வனத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே மாவட்ட வனத்துறை சார்பில் 13 யானைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானைகளின் வருகை குறித்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறுகையில், ஓசூர் வனச்சரகம் கும்பளம் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள 4 குட்டி யானைகள் உட்பட 13 யானைகளின் கண்காணிப்பு பணிக்காக தலா 6 பேர் கொண்ட 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட வனத்துறை சார்பில் ஓசூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள காருபெல்லா, சின்னதின்னூர், திராடி, திம்மராயன்கொட்டாய், கோயில்பள்ளி, பெப்பாலப்பள்ளி, ஆலுசோனை, கடத்தூர், சின்னகுத்தி, கும்பளம், ராமன் தொட்டி உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கியில், கும்பளம் காப்புக்காட்டுக்குள் கர்நாடகாவில் இருந்து யானைகள் வந்துள்ளது குறித்தும், இரவு நேரங்களில் யாரும் காவலுக்கும், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற் கும் செல்ல வேண்டாம்.

மேலும் செம்மறியாடு, மாடுகளை காட்டுக்குள் ஓட்டிச் செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் யானைகள் தென்பட்டால் வனத்துறையின் கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் வனத்துறை சார்பில் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x