Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM
மதுரை: குமரி மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்பு 13 பேரூராட்சிகளில் விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குமரி மாவட்டத்தில் கிள்ளியூர், ஏழு தேசம், கல்லுக்கூட்டம் உள்ளிட்ட 13 பேரூராட்சிகளில் ரூ.19.50 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளுக்கு தேர்தலுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இந்த டெண்டர் அறிவிப்பு 6 நாட்களுக்கு முன்பே நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளில் நடைபெற்ற டெண்டரிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. அதிகாரிகள் சிலருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர். எனவே தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT