Published : 01 Jun 2021 03:11 AM
Last Updated : 01 Jun 2021 03:11 AM

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்ததால் : 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி :

சீனாவில் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

உலக அளவில் மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு 40 ஆண்டுகளுக்கு முன்புகுடும்ப கட்டுப்பாட்டுக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதன்படி ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை பெருக்கம் கட்டுக்குள் வந்தது. அதேநேரம், அந்நாட்டில் இளைஞர்களைவிட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஒரு குழந்தை திட்டம் 2016-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசு ஊக்குவித்த்து. ஆனாலும் கடந்த ஆண்டில் 1.2 கோடி குழந்தைகள் மட்டுமே பிறந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது. குழந்தை பிறப்பு விகிதம்1.3 ஆக உள்ளது. இது இப்போதுள்ள மக்கள் தொகையை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவையான அளவைவிட குறைவு ஆகும். 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இன்படி அந்நாட்டின் மக்கள் தொகை 141 கோடியாக உள்ளது.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி அந்நாட்டு தம்பதிகள் இனி அதிகபட்சம் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில், ஒரு குழந்தை திட்டம் அமலுக்கு வந்த பிறகு ஆண், பெண் பாலின விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான தம்பதிகள் ஆண் குழந்தைகளை விரும்புகின்றனர். இதனால், கருவில் உள்ள குழந்தையை சோதனை மூலம் கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வருவதே இதற்குக் காரணம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x