Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

சிறு, குறுந் தொழில் நிறுவன ஊழியர்கள் - இருசக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல அனுமதிக்க ‘டான்ஸ்டியா’ கோரிக்கை :

சிறு, குறுந் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று டான்ஸ்டியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்கள் (டான்ஸ்டியா) சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கரோனாவால் கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பல நிறுவனங்கள் கடனில் சிக்கித் தவித்தன.

இந்நிலையில், கரோனா தொற்று 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதால், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் சிறு, குறுந் தொழில்கள் மேலும் நஷ்டமடையத் தொடங்கி உள்ளன. சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

இந்த ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும், ஊழியர்கள் பணிக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்து இயக்குவதில், சிறு, குறுந் தொழில் நிறுவன உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, சிறு, குறுந் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றவர அரசு இ-பாஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x