Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
புதுச்சேரியில் தற்போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், சிகிச்சை முடிந்த கரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்பட்டு வருகிறது. புதுவையில் இதுவரை 40 நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு, அதில் இரண்டு பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
இந்நோயின் தாக்கம் மற்றும் எதிர்கொள்ளும் முறைகள் குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர்அருண் கூறியதாவது:
கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவினைபரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்து, சர்க்கரை அளவினை சீராக பாதுகாத்து வந்தால் இந்நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். வீட்டிலேயே ஆக்சிஜன் உருவாக்கும் கருவி பயன்படுத்துவோர், அதற்காக சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் அல்ல. கரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்பினால் இந்நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு மருந்து, மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு இந்நோய் ஏற்படுகிறது. இதனை தொடக்க நிலையிலேயே அறிந்து கொள்ள இந்நோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, மூக்கு வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படுவது, கண்ணில் வலி அல்லது வீக்கம், இரட்டைப் பார்வை, பல் வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
இந்த நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் காலதாமதமானால் இந்த கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகி உயிரிழப்பு கூட நேரிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT