Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆக்ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் வழங்கல் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், ஆக்சிஜன் அளவை கண்டறிவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆக்ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள் வழங்கும் பணியை அமைச்சர்கள் எஸ்.ரகு பதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகி யோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் அளவை மதிப்பீடு செய்வதற்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டரும், உடல் வெப்பநிலையை அளவிட தெர்மல் ஸ்கேனரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்படுகின்றன. இக்கருவிகள் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

சிறையில் அடைக்கப்படுவோர் கரோனா பரிசோதனை செய்த பிறகே அடைக்கப் படுகின்றனர். சாதாரண அறிகுறி உள்ளவர்களுக்கு சிறைச்சாலை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கரோனா தடுப்பூசியும் போடப் படுகிறது என்றார்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது: மாவட்டத்தில் தீவிரமாக மேற் கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கையால் கரோனா தொற்று குறைந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங் கப்பட்ட ஆக்ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர்களை கொண்டு, தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் முதலில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், சுகாதார துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x