Published : 01 Jun 2021 03:14 AM
Last Updated : 01 Jun 2021 03:14 AM

ஊர் சுற்றியவர்களுக்கு கரோனா பரிசோதனை :

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் அனுமதி யில்லாமல் சுற்றிய 370 வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் அவசியம் இல்லாமல் வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க காவல் துறையினர் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகளை அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரில் போக்குவரத்திலும் மாற்றம் செய்துள்ளனர்.

ஆனால், அதையும் மீறி காய்கறி வாங்கவும், மருந்து வாங்கவும், மருத்துவமனை செல்வதாகவும் கூறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், அவசியம் இல்லாமல் சுற்றுபவர்களை பிடித்து கரோனா பரிசோதனை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வேலூர் மற்றும் காட்பாடி, குடியாத்தம் உட்கோட்டத்தில் வாகனத் தணிக்கையை காவல் துறையினர் நேற்று தீவிரப்படுத்தினர். முக்கிய சந்திப்புகளில் சுகாதாரத் துறையினர் உதவியுடன் கரோனா பரிசோதனை செய்யும் குழுவினருடன் காவல் துறையினர் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட நபர்களைத் தவிர்த்து மற்றவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ததுடன், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் அங்கேயே நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் வேலூர் மற்றும் காட்பாடி உட்கோட்டத்தில் தலா 110 வாகனங்களும், குடியாத்தம் உட்கோட்டத்தில் 150 வாகனங்கள் என மொத்தம் 370 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 370 நபர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x