Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் (81) கரோனா பாதிப்பால் சென்னையில் நேற்று காலமானார்.
சென்னையை சேர்ந்த அவர், 1966-ல் ஐ.நா. சபையில் ஆய்வாளர் பணியில் சேர்ந்தார். பின்னர், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் உணர்வு காரணமாக மார்க்சியம் பக்கம் திரும்பினார்.
பின்னர் ஐ.நா. வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். சிஐடியு அமைப்பின் மாநிலப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய அவர், 1973-ல் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகி அம்மாள் ஆகியோருடன் இணைந்து தமிழக ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கினார். வரதட்சணை, குழந்தை தொழிலாளர், பெண் சிசுக்கொலை, சாதிய ஒடுக்குமுறை, குழந்தைத் திருமணம், இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் போராட்டங்களை முன்னெடுத்தார்.
பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தீவிரஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த மைதிலி சிவராமன், சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மதிமுகபொதுச் செயலர் வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT