Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

சென்னைக்கு 60 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் : அண்ணாநகர், பெரம்பூர், மயிலாப்பூர் எம்எல்ஏக்கள் வழங்கினர்

சென்னை மாநகராட்சிக்கு அண்ணாநகர், பெரம்பூர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் என மொத்தம் 60 இயந்திரங்களை நேற்று வழங்கினர்.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் கரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், சென்னை மாநகராட்சிக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கி வருகின்றன. அவற்றை அரசு மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்றவாறு மாநகராட்சி வழங்கி வருகிறது.

இதனிடையே கொளத்தூர் எம்எல்ஏ என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த26-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திரு.வி.க.நகர் எம்எல்ஏக்கள், மத்திய சென்னை எம்.பி. சார்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் 80 ஆக்சிஜன் செறிவூட்டிகள், கடந்த 27-ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உதயநிதி எம்எல்ஏ முன்னிலையில் அண்ணாநகர், பெரம்பூர் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏக்கள் சார்பில் தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன்மாளிகையில் நேற்று நடைபெற்றது.

எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், த.வேலு, எம்.மோகன் ஆகியோர் ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) சங்கர்லால் குமாவத், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ்,ஜெ.மேகநாத ரெட்டி, விஷூ மகாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x