Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் அனுப்பிவைப்பு :

பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சத்துணவு மையங்களுக்கு முட்டைகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்பதால் இம்மாதம் உலர் உணவு பொருட்கள் மற்றும் முட்டைகளை வழங்கலாமா என்பது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்படாத காரணத்தால் இதுவரை முட்டை, உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை. இந்த சூழலில், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க சத்துணவு மையங்களுக்கு முட்டைகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு முட்டை, உலர் உணவு பொருட்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் அரசாணை வெளியாக உள்ளது. எனவே, சத்துணவு மையங்களுக்கு முட்டைகளை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் முட்டை, உலர் உணவு பொருட்களை வழங்கினாலும் கூட மே மாதத்துக்கான ஒதுக்கீடை சேர்த்து வழங்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக, இறுதி முடிவை தமிழக அரசு எடுத்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x