Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

‘ உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் செயல்பாடுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு : பயனாளிகளுடன் தொலைபேசியில் உரையாடினார்

தமிழக மின்ஆளுமை முகமை அலுவலகத்துக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அத்துடன், பயனாளிகளிடமும் தொலைபேசியில் உரையாடினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

100 நாட்களில் தீர்வு

தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வுகாணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற புதியதுறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் இதுவரை 4 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு, மின் ஆளுமைமுகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மனுதாரருக்கு குறுஞ்செய்தி

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதும் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி, மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்ப தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மின்ஆளுமை ஆணையர் அலுவலக வளாகத்துக்கு நேற்று நேரில் சென்றார். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’துறையின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் எவ்வாறு கணினியில் பதிவு செய்யப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அவற்றின் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். துறைரீதியாக பெறப்பட்ட மனுக்கள் எண்ணிக்கை,அவற்றின்மீது எடுக்கப்பட்ட, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இத்துறையின்கீழ் பயனடைந்த தேனி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த பயனாளிகளுடன் முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடினார். அவர்களது மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கிடைக்கப் பெற்ற பலன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது கரோனா தொற்று பரவாமல்இருக்க முகக் கவசம் அணியும்படி பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல்,தமிழ்நாடு மின்ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x