Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

தென்மேற்கு பருவமழை 31-ல் கேரளாவில் தொடக்கம் : இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, கேரளாவில் மே 31-ம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரிக்கும்.

வெப்பச் சலனம் காரணமாக மே 29, 30, 31, ஜூன் 1-ம் தேதிகளில் கன்னியாகுமரிமற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். 30-ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் டெல்டா, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

அடுத்த 2 நாட்களுக்கு மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x