Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்வதற்கான - டெண்டருக்கு விதித்த தடையை எதிர்த்து அரசு மேல்முறையீடு : மே 31-ம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சென்னைஉயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

தமிழக பொது விநியோகத் திட்டத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் பருப்பு, பாமாயில்,சர்க்கரை உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படுகின்றன. இதற்கான டெண்டரில் பங்கேற்க நிறுவன திறன், உள்கட்டமைப்பு, ஆண்டு வருமானம் முக்கிய தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பொது விநியோகத் திட்டத்துக்காக 20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஏப்ரல் 26-ம் தேதியும், 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பு மே 5-ம் தேதியும் வெளியிடப்பட்டன.

இதில் தற்போது பல்வேறுநிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. முன்பு டெண்டரில் பங்கேற்க, நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.71 கோடியாக இருக்க வேண்டும். இது தற்போது ரூ.11 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

டெண்டர் மதிப்பு ரூ.2 கோடிக்குமேல் இருந்தால் டெண்டரில் பங்கேற்க 30 நாட்கள் அவகாசம்வழங்க வேண்டும். தற்போது 6 நாளில் டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. விதிகளைப் பின்பற்றிமுறையாக நடத்தப்படாத டெண் டரை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இடைக்காலத் தடை

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, இந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து, அரசுதரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளைபிறப்பித்த உத்தரவை எதிர்த்துதமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், ‘கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக தங்கு தடையின்றி பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை வழங்கவேண்டி உள்ளது. எனவே பருப்பு, பாமாயில் டெண்டருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.சரவணன் அமர்வில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமார் நேற்று காலை ஆஜராகி, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

பட்டியலுக்கு வரும்போது வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிற்பகலில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி மீண்டும் இதுதொடர்பாக முறையிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு வரும் 31-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x