Published : 28 May 2021 06:41 AM
Last Updated : 28 May 2021 06:41 AM
கரோனா ஹாட் ஸ்பாட் ஆக மாறிய கோவையில், சென்னை ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் முகாமிட்டு தொற்றுதடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போதைய சூழலில்,கரோனா ‘ஹாட்ஸ்பாட்’ ஆக கோவைமாறியுள்ளது. தினமும் மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வந்த சூழலில், கடந்த இரண்டுநாட்களாக தினசரி பாதிப்பில் சென்னையை மிஞ்சி கோவை முதலிடம்பிடித்துள்ளது. கோவையில் இதுவரை 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 34,487-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை 23,840-க்கும் மேற்பட்டோர் தொற்று உறுதி செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர். கோவையை பொருத் தவரையில், மாநகராட்சிப் பகுதியில் தான் தொற்று பாதிப்பு அதிகளவில் (56.77 சதவீதம்) உள்ளது.
கோவை மாவட்டத்தில் தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வணிக வரித்துறை ஆணையர்எம்.ஏ.சித்திக் ஆகியோர் கோவையில் நேற்று முகாமிட்டு ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி யுள்ளனர். சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா பரிசோதனை மேற்கொண்டால் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் கிடைப்பதில்லை. தாமதமாவதால், பரிசோதனை மேற்கொண்டவர்களில் தொற்று உள்ளவர்கள், தங்களுக்கு தொற்று இருப்பதுதெரியாமல் வெளியிடங்களுக்கு செல்வதால் தொற்று பரவுகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் சிலர், விதிகளை மீறி வெளியே சுற்றியதாலும், ஊரடங்கு விதிகளை மக்கள் மீறுவதாலும் தொற்று பரவுகிறது.
தடுப்பூசிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமும் தொற்று பரவ முக்கிய காரணமாகும். மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “மாநகரில் 1,500 பணியாளர்கள் 3 நாட்களுக்குஒருமுறை வீடு வீடாகச் சென்று, காய்ச்சல், சளி அறிகுறிகள் உள்ளதா எனக் கேட்டு, அறிகுறி இருந்தால் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தற்போது கூடுதலாக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மொத்தம் 3 ஆயிரம் பேர், தினமும் மாநகரில் வீடு வீடாகச் சென்று தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.
புறநகரப் பகுதிகளில் 100 வீடுகளுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இயங்கும் அத்தியாவசிய தொழிற்சாலைகளில் கரோனா தடுப்புப் பணிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா, தொற்று பாதிப்பு உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.
தொற்று பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளிகடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்துவலியுறுத்தி வருகிறோம். தினசரி சராசரியாக 14 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதன் முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் 4 ஆயிரம் படுக்கை வசதிகளும், மாவட்டத்தில் 3 ஆயிரம் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 228 ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளிலும் தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், 12 ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும் தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT