Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அடுத்த வாரம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்வி களுக்கு அவர் அளித்த பதில்கள்:

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரிக்கிறதே?

மேற்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மை தான். சென்னை முதலிடத்திலும், கோவை 2-ம் இடத்திலும் இருந்தது. தற்போது சென்னையில் தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கோவையில் குறைப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

திருவள்ளூரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் அந்தச் சூழல் இருந்ததை மறுக்கவில்லை. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இப்போது எங்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஏதேனும் குறிப்பிட்ட இடத்தில் இல்லை என்று சொன்னீர்கள் என்றால், உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளேன்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளதா?

நாங்கள் ஏற்கெனவே தேர்தல் அறிக் கையில் என்னென்ன தெரிவித்தோமோ அதை எல்லாம் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கரோனா தொற்று மிகவும் அதிகமாகப் பரவி வருவதால் அதைத் தடுக்கும் பணியில் முதலில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அந்தப் பணிகளை விரைவில் மேற் கொள்வோம்.

தமிழகத்தில் ஊடரங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா?

ஒரு வாரத்துக்கு எந்தத் தளர்வுமின்றி ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஏற் கெனவே அனைத்து கட்சித் தலைவர் களையும் அழைத்து ஆலோசனை நடத்தியபோது, முதலில் ஒரு வாரம் ஊரடங்கு போடுவோம். தேவைப்பட்டால் 2-வது வாரமும் அதை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கலாம் என முடிவெடுத்துள்ளோம். இப்போது உள்ள நிலை ஓரளவுக்கு திருப்தியாக இருக்கிறது. இன்னும் முழு திருப்தி வரவில்லை. வந்தபின் அதுகுறித்து யோசிப்போம்.

திருவள்ளூரில் அம்மா உணவகங்கள் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து?

எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதை உடனடியாக பரிசீலித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இந்த ஆட்சியை பொறுத்தவரை அரசியல் நோக்கோடு எதையும் அணுக மாட்டோம். மக்கள் நலனை அடிப்படையாக வைத்துதான் அணுகுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பதிலளித்தார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் களை காக்க ஏராளமான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்கி யுள்ளோம். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த அரசு இயங்கி வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x