Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM

நீராதாரங்களை அதிகரிக்க - புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் : நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுரை

தமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க புதிய நீர்நிலைகளை உருவாக்குவதுடன், தடுப்பணைகளையும் அதிக அளவில் கட்ட வேண்டும் என்று மாவட்ட அளவிலான நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் நீர்வளத் துறை திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உட்பட 16 மாவட்டங்களில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அத்திக்கடவு-அவினாசி நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் திட்டம், மேட்டூர் அணை உபரி நீரை நீரேற்றம் மூலம் சரபங்கா வடிநிலப் பகுதியில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம், கீழ்பவானி திட்ட நீட்டிப்பு, புனரமைத்தல் மற்றும் நவீனமாக்கல் திட்டம் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம், நொய்யல் உப வடிநிலைத் திட்டம், புதிய தடுப்பணைகள், அணைக்கட்டுகள், திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் தத்தமஞ்சி ஏரிகளின் கொள்ளளவை மேம்படுத்தி, நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம், அணைகள் புனரமைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும், விழுப்புரம் கழுவேலி ஏரியை மீட்டெடுத்தல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியை மீட்கும் திட்டம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் இதர மாவட்டங்களில் நடைபெறும் நீண்டகால வெள்ளத் தணிப்புத் திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

நீராதாரத்தை அதிகரிக்க புதிய தடுப்பணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டப்பணிகளை செயல்படுத்தல் தொடர்பாக தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்பு மற்றும் செயற் பொறியாளர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர், இந்தப் பணிகள் தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில், பொதுப்பணித் துறை செயலர் கே.மணிவாசன், சிறப்பு செயலர் கே.அசோகன், நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் டி.ரவீந்திரபாபு, தலைமைப் பொறியாளர்(திட்ட உருவாக்கம்) ஜி.பொன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x