Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

பைசர், மாடெர்னா நிறுவனங்கள் நேரடியாக - மாநில அரசுகளுக்கு தடுப்பூசி விற்க மறுப்பு : டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

பைசர், மாடெர்னா உள்ளிட்ட அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க மறுத்துவிட்டதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆனால் போதுமான தடுப்பூசிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. மத்திய அரசுமாநிலங்களுக்கு ஒதுக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. இதனால் மாநில அரசுகள் மருந்துநிறுவனங்களிடமிருந்து நேரடியாக வாங்க முயற்சி செய்து வருகின்றன.

ஆனால், பைசர், மாடெர்னா போன்ற தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை விற்க முடியாது என மறுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். இதேபோல, தடுப்பூசிகளை வாங்க அணுகியபோது மாடெர்னா நிறுவனம் மாநில அரசுக்கு நேரடியாக விற்க மறுத்துவிட்டதாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதுகுறித்து அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறும்போது,"தடுப்பூசி வாங்குவதற்காக பைசர், மாடெர்னா நிறுவனங்களை அணுகினோம். ஆனால் மாநிலங்களுக்கு நேரடியாக விற்க முடியாது. என்றும் மத்தியஅரசிடம் மட்டுமே தடுப்பூசி விற்பனை செய்வோம் என்றும் அந்த நிறுவனங்கள் கூறிவிட்டன.

ஒவ்வொரு மாதமும் டெல்லிக்கு 80 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தேவையாக உள்ளன. ஆனால் மே மாதத்தில் 16 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் தடுப்பூசி ஒதுக்கீடு 8 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டோ ருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம் இதனால் தடைபட்டுள்ளது. கரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் மத்திய அரசு தடுப்பூசி நிறுவனங்களிடம் விரைந்து தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மேலும் பிற நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பூசி களை வைத்திருந்தால் அவற்றைஇந்தியாவுக்கு வழங்க முன்வரலாம்" என்றார்.

மேலும் தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை பிற நிறுவனங்களில் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவிலேயே தடுப்பூசி உற்பத்தியை மேற் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து ஆறாவது வாரமாக ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x