Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

புதுவையில் மே 31 வரை தளர்வுடன் ஊரடங்கு நீடிப்பு : ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் மே 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த 10-ம் தேதி முதல் இன்று (மே 24) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டி புதுச்சேரியிலும் மே 31-ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடியபொது அடைப்பு மே 24-ம் தேதி வரை அமலில் உள்ளது. அத்தியாவசிய சேவை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தினமும் காய்கறி, பழங்கள் உள்பட சத்தான உணவுகள் கரோனா நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை என்பதாலும், மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு கடைகள் 12 மணி வரை திறக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் கூட்டம் கூடாமல் இடைவெளி விட்டு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி வாங்கிச் செல்ல வேண்டும். பால், மருந்து போன்றவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கி அதிக தூரம் சாலையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. இதனால் கரோனா தாக்கம் சற்றே குறைய ஆரம்பித்துள்ளது.

இது, மக்கள் பங்களிப்பு இல்லாமல் நடைபெற முடியாது. எனவே பொதுமக்கள் துணையோடு, ஏற்கெனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31-ம் தேதி வரை தொடரும். நிலைமையை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும். விரிவான அரசாணை வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.

குணமடைவோர் எண்ணிக்கை உயர்வு

புதுச்சேரியில் கரோனா தொற்று வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 9,037 பேரை பரிசோதித்ததில் 1,448 பேருக்கு தொற்று உறுதியானது. அதேநேரத்தில் நேற்று கரோனா தொற்றிலிருந்து 1,903 பேர் விடுபட்டுள்ளனர். கடந்த மாதம் தொற்றிலிருந்து குணமடைவோர் சதவீதம் 91-ல் இருந்தது. அது படிப்படியாக குறைந்து மே இரண்டாவது வாரத்தில் 77 ஆக சரிந்தது. தற்போது இச்சதவீதம் அதிகரித்து வருகிறது. குணமடைவோர் சதவீதம் நேற்று 81.04 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. நேற்று 34 பேர் உயிரிழந்தனர். இதுவரை 1,359 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் தற்போது மருத்துவமனைகளில் 2,026 பேர், வீடுகளில் 14,825 பேர் என 16,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x