Published : 24 May 2021 03:11 AM
Last Updated : 24 May 2021 03:11 AM
தொழிற்சங்கங்கள், வணிக சங்கங்களுடன் இணைந்து தினந்தோறும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ முதல்கட்டமாக அதிக தொற்று அபாயம் உள்ளவர்களுக்கும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முன்னுரிமை அடிப்படையில், சமையல் எரிவாயு விநியோகப் பணியாளர் கள், தினசரி நாளிதழ் விநியோகம் செய்பவர்கள், பால் விநியோகம் செய்யும் முகவர்கள், மருந்தகங்களில் பணிபுரிவோர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள், பெட்ரோல் நிலைய பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நேற்றுமுன்தினம் கோவையில் 11 தனியார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 9,464 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள், தொழில்துறை கூட்டமைப்பு, வணிக சங்கங்களுடன் இணைந்து தினந்தோறும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை சார்பில் வைசியாள் வீதியில் நேற்று நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் முகாமில் பொற்கொல்லர்கள், தங்க நகைக்கடை ஊழியர்கள், வியாபாரிகள், முதன்மை தயாரிப்பாளர்கள் என மொத்தம் 1,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணியை எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ நேற்று நேரில் ஆய்வு செய்தார். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ள தொழிலகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் 3 இடங்களில் நடைபெற்றது.
நேற்று முன்தினம் 2,434 தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நேற்று வங்கிப் பணியாளர்கள், அஞ்சலகப் பணியாளர்கள், ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரிவோர் என மொத்தம் 2,178 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT