Published : 22 May 2021 03:12 AM
Last Updated : 22 May 2021 03:12 AM

திருப்போரூரில் உள்ள - கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான 31 சென்ட் நிலம் மீட்பு :

கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நில அளவீட்டு பணியின்போது ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்புடைய 31 சென்ட் நிலத்தை, கோயில் நிர்வாகத்தினர் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்புடைய 612 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்நிலங்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால், அவற்றை மீட்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதில், நிலங்களை முழுமையாக அளவிடு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கரோனா தொற்று காரணமாக நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும், தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. திருப்போரூர் வருவாய்த் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாக அதிகாரிகள் இணைந்து கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், அவற்றில் அமைந்துள்ள கட்டிங்களை கடந்த சில நாட்களாக அளவீடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவஞ்சாவடி தெருவில் கோயில் நிலங்களை அளவீடு செய்தபோது 31 சென்ட் நிலம் தனிநபர் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்நிலத்தில் இருந்த ஷெட்டை மூடி கோயில் பணியாளர்கள் சீல் வைத்தனர்.

மேலும், ‘கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம்' எனஅறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x