Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

வீட்டுக்குள் புகுந்து உணவைத் தேடிய கரடி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர் :

கோத்தகிரி: ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால், வனப்பகுதியைவிட்டு வெளியேறும் வன விலங்குகள், சாலைகளில் உலா வருகின்றன. அவ்வப்போது குடியிருப்புப் பகுதிக்குள் புகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், கோத்தகிரி அருகே பனகுடி கிராமத்தில் ராமன் என்பவரின் வீட்டுக்குள் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கரடி புகுந்தது. வீட்டுக்குள் உணவு ஏதேனும் உள்ளதா என்று சுற்றிசுற்றி பார்த்துவிட்டு ஏதும் கிடைக்காததால் அங்கிருந்து சென்றுவிட்டது. கரடி வீட்டுக்குள் புகுந்த நேரத்தில், ராமனின் குடும்பத்தினர் மற்றோர் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டனர். இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தக் காட்சி, ராமன் வீட்டில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்தக்காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘கோத்தகிரி பகுதியில் பகல் நேரங்களில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைக்குகூட வெளியே வர முடியாமல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x