Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

ஊரடங்கிலும் உலா வருவதை நிறுத்தாத கடலூர்வாசிகள் :

கரோனா தொற்றால் ஊரடங்கு அறிவித்த நிலையிலும் இருசக்கர வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறையவில்லை.

கரோனா 2-வது அலையின் காரணமாக கடந்த 10 முதல் 24-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்த மாநில அரசு, அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஏதுவாக காலை 6 முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும், திருமணம், மருத்துவமனை, மருந்து பொருட்கள் வாங்க, தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்வோர் போன்ற அவசியத் தேவைக்காக வெளியே வருவோருக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதோடு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது.

அரசு ஊரடங்கு அறிவித்த போதிலும், இருசக்கர வாகனத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரோ கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

கடலூர், பண்ருட்டி, வடலூர்,நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் காலையில் தொடங்கி மாலை வரை இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலர் முகக்கவசம் அணியாமலும், 3 பேராகவும் அமர்ந்து செல்வதை காண முடிகிறது.

இதுதொடர்பாக தலைமைக் காவலர் ஒருவரிடம் பேசியபோது, “பொதுமக்களிடம் கனிவுடன் பேச வேண்டும் என்கின்றனர். நாங்கள் கனிவோடு பேச தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால் பொதுமக்களை எங்களிடம் கனிவுடன் பேசச் சொல்லுங்கள். வண்டியை நிறுத்தினாலே கண்டுகொள்ளாமல் செல்கின்றனர். அப்படியும் நிறுத்தி ஏதாவதுகேட்டால் உடனே செல்போனை எடுத்து எங்களை படம் பிடிப்பது,தவறான தகவல்களை மேலிடத்துக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலிடத்தவர்களும் அதை ஆராயாமல், மன்னிப்புக் கேள், அபராதத்தை திருப்பிக் கொடு என்றெல்லாம் உத்தரவிடுகின்றனர். அரசின் உத்தரவை மதித்து செயல்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் தாங்களாக திருந்த வேண்டும். நாங்கள் கட்டாயப்படுத்தி திருத்துவதால் எங்களுக்குத்தான் பல்வேறு இடையூறு ஏற்படுகிறது” என்றார் விரக்தியாக.

அபராதம் வசூலிப்பு

மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடந்த 9-ம் தேதி முதல் நேற்று வரை 23,805 வழக்குகளும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 730 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.51,38,000 வசூலிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முகக்கவசம் அணியாத 501 நபர்கள் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 53 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராத தொகையாக ரூ.1,26,700 வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x