Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் : ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வெள்ளோட்டம் :

ஹைதராபாத்: ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்களில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை சோதனை அடிப்படையில் போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன.

கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகள் மட்டுமே தற்போது இந்தியாவில் தலா இரு முறை போடப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இருப்பதால், இரண்டாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் மருத்துவமனைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 3-வதாக ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி எனும் கரோனா தடுப்பூசியை ஹைதராபாத் டாக்டர் ரெட்டி’ஸ் மருந்து நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்யவும், விற்பனை செய்யவும் முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.

வரும் ஜூன் மாதம் முதல் இதன் தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய சூழலில் நாட்டிற்கு 3-வதாக கரோனா தடுப்பூசிகள் தேவை என்பதால், ஸ்புட்னிக்-வி ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து தனி விமானம் மூலம் இருமுறை வரவழிக்கப்பட்டது. மொத்தம் 2 லட்சம் டோஸ்கள் இருப்பு உள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ரெட்டி’ஸ் நிறுவனம் நேற்று சோதனை அடிப்படையில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடங்கியது. 91.6 சதவீதம் வரை இது செயலாற்றல் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை நேற்று ரெட்டி’ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x