Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த குறு, சிறு நிறுவன தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என கோவையில் உள்ள 19 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘ஃபோசியா’ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஃபோசியா சார்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஸ்டீல் நிறுவனங்கள் இம்மாத தொடக்கத்தில் ரோல்டு காயில் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.4500-ஆக உயர்த்தின. இம்மாதத்தின் இடைப்பட்ட காலத்துக்கு பிறகு மற்றுமொரு விலை உயர்வை எதிர்பார்க்கலாம். அதோடு சேர்த்தால், கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஸ்டீல் விலையானது, 100 சதவீத உயர்வை எட்டிவிடும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது காப்பர் விலை கிலோவுக்கு 90 சதவீதம் உயர்ந்துள் ளது. அலுமினியம், துத்தநாகம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதே விலை உயர்வு ரப்பர் மற்றும் அனைத்து பிளாஸ்டிக் மூலப்பொருட்களிலும் ஏற்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை காப்பாற்ற, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் உயர்த்தப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
குறு, சிறு நிறுவன தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மூலப்பொருட்கள் விலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை குழுவை மத்திய அரசு உருவாக்க வேண்டும். நிலையான விலையை உறுதி செய்வதுடன், ஆண்டுக்கு ஒருமுறை மூலப்பொருட்கள் விலையை சீரமைக்க வேண்டும். அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட விலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மூலப்பொருட்கள் மானிய திட்டத்தை பதிவு பெற்ற குறு, சிறு நிறுவனங்களுக்கென கொண்டு வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT