Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

சென்னையில் ஒரே இடத்தில் - குழுவாக தடுப்பூசி போட மாநகராட்சியை அணுகலாம் :

சென்னையில் ஒரே இடத்தில் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால், மாநகராட்சியை அணுகலாம். அவர்கள் விரும்பும் இடத்தில் முகாம் அமைத்து, தடுப்பூசி போடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்தால், நோய் பரவல் கட்டுக்குள் வரும் என்று மாநகராட்சி நிர்வாகம் கருதுகிறது.

அதனால் பொதுமக்கள் எளிதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 175 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 16-ம் தேதி மட்டும் 11 ஆயிரத்து 312 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 245 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

30-க்கும் மேற்பட்டோர்...

இந்நிலையில், தனியார் நிறுவன ஊழியர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் நலச் சங்கத்தினர் மற்றும் பிற குழுக்கள், தனி நபர்கள் என 45 வயதுக்கு அதிகமான, 30-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் மாநகராட்சியை அணுகலாம். அவர்கள் விரும்பும் இடத்தில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 46122300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x