Published : 18 May 2021 03:13 AM
Last Updated : 18 May 2021 03:13 AM

ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் : விதிமீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு ‘சீல்’ :

ஆம்பூர்/ஜோலார்பேட்டை: ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டையில் விதியை மீறி திறக்கப்பட்ட 5 இறைச்சிக்கடைகள் உட்பட 8 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் நேற்று ‘சீல்’ வைத்து அபராதம் விதித்தனர்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து கடைகளும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வணிகர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா ? என்பதை அந்தந்த வட்டத்துக்கு உட்பட்ட வருவாய்த் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது, சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர், சாமியார் மடம், நேதாஜி சாலை, உமர்ரோடு, ஆம்பூர் புறவழிச்சாலை, கஸ்பா பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், சாமியார் மடம் பகுதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட சிமென்ட் கடை, வெல்டிங் கடைகளுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்து 2 கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, ஆம்பூர் புறவழிச்சாலையில் நடத்திய ஆய்வில் நேரக்கட்டுப்பாட்டை மீறி திறக்கப்பட்ட இறைச்சிக்கடைக்கும், ஜெராக்ஸ் கடை ஒன்றுக்கும் வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்து 2 கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1,600 அபராத மாக வசூலித்தனர்.

அதேபோல், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் ராமஜெயம் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் தனபாண்டியன், சுகாதார ஆய்வாளர் உமாசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜோலார்பேட்டை நகர் பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தியபோது, நேரக்கட்டுப்பாட்டை மீறி திறந்திருந்த 4 இறைச்சிக்கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x