Published : 17 May 2021 03:12 AM
Last Updated : 17 May 2021 03:12 AM

புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டம் - மாநில கல்வி அமைச்சர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்த மத்தியக் கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலக் கல்வி அமைச்சர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல்தீவிரத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தற்போது பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று (மே 17)ஆலோசனைக் கூட்டம் நடைபெறஉள்ளது.

காணொலியில் ஆலோசனை

காணொலிக் காட்சி வழியாகநடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலக் கல்வித் துறை செயலர்களும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலக் கல்விஅமைச்சர்களும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அனைத்து மாநிலங்களின் கல்வித் துறை செயலர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இணையவழியில் கல்வி

கரோனா காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, இணையவழியிலான கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள், புதியகல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துதலின் நிலை தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை மாநில கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும்.

மேலும், இந்தக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் தெரிவிக்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்விக் கொள்கைக்கு தற்போதைய திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x