Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

குரோம்பேட்டை கல்லூரியில் அமைக்கப்படும் - சித்த மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு :

குரோம்பேட்டை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டநிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்களுக்கான சிகிச்சை மையங்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு சித்த மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், எம்எல்ஏ இ.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பரசன் கூறும்போது, "இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x