Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM
அதிகரித்து வரும் கரோனா பரவல் தொடர்பாக, ஆளுநர் தமிழிசையுடன் தொலைபேசியில் பிரதமர்மோடி உரையாடினார். புதுவைக்குதேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் உறுதியளித்தாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று வாட்ஸ் அப்பில் தெரிவித்த விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து முழு விவரங்களையும் மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார். மேலும் கரோனா நோய் தொற்று விகிதம், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்கள் போன்ற விவரங்களை துல்லியமாக கேட்டறிந்தார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு ஏற்கெனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக, மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என அப்போது பிரதமர் உறுதி அளித்தார். மத்திய அரசால் வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் உடல்நிலை பற்றி மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்தார், அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT