Last Updated : 17 May, 2021 03:14 AM

 

Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் - கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா? : சட்ட அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் (ஏஏஜி) பணியிடங்களை 3 ஆக உயர்த்த வேண்டும் என சட்ட அமைச்சர் மற்றும் தலைமை அரசு வழக்கறிஞருக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு அரசு தலைமை வழக்கறிஞர், 2 தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஒரு தலைமை உரிமையியல் வழக்கறிஞர், 12 கூடுதல் அட்வகேட் ஜெனரல், 33 சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், 51 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், 102 அரசு வழக்கறிஞர்கள், 15 கூடுதல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் என 221 அரசு வழக்கறிஞர்கள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக உயர் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்த அதிமுக வழக்கறிஞர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தலைமை அரசு வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் சேர்த்து 17 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்றக் கிளையில் தற்போது 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்கள் உள்ள நிலையில், அதை ஒன்றாகக் குறைக்க முயற்சி நடைபெறுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை 3 ஆக உயர்த்த வேண்டும் என சட்ட அமைச்சர் மற்றும் தலைமை அரசு வழக்கறிஞருக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடங்கிய நாளில் இருந்து வழக்கு தாக்கலாவதும், வழக்குகளுக்குத் தீர்வு காண்பதும் அதிகரித்து வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்களின் தரம் உயர்ந்து வருகிறது. மதுரை கிளையில் இருந்து ஏராளமானோர் மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து பெருவது இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையுடன் புதிய மாவட்டங்கள் இணைந்துள்ளன. இதனால் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே, தற்போதுள்ள 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடங்களை 3 ஆக உயர்த்த வேண்டும். இது பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் விரைவில் முடிவதற்கு வழிவகை செய்யும். எனவே, உயர் நீதிமன்றக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பணியிடத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x