Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து? : சிபிஎஸ்இ அதிகாரிகள் விளக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இணையதளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம். தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியங்களையே தற்போது ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றுசிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனாபரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பல்வேறு மாநிலங்களின் கல்வி வாரியங்கள் தள்ளிவைத்துள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்புபொதுத் தேர்வை ரத்து செய்து,பிளஸ் 2 தேர்வுகளை தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் தீவிரம் ஜூலை மாதம் வரை இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிவருகின்றன.

இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் முதல் வாரத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில்கொண்டு தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியங்களையே தற்போது ஆராய்ந்து வருகிறோம். எனவே, சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மாணவர்கள், பெற்றோர்கள் நம்பவேண்டாம். தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x