Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM
தமிழக அரசு காய்கறி, மளிகைக் கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்ததாலும், இன்று (மே 16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைத் தெருக்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொற்று மேலும் அதிகரித்ததால், நேற்று முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டதாலும், அடுத்த நாள் (இன்று) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் நேற்று காலை 6 மணி முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, அயனாவரம் காய்கறி சந்தை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், ஷெனாய் நகர், உள்ளிட்ட பல்வேறுபகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் கடைத் தெருக்களில் மக்கள் குவிந்தனர்.
ஒவ்வொரு கடையிலும் வியாபாரியின் குடும்பத்தினர் அனைவரும் விற்பனையில் ஈடுபட்டு,மக்கள் கூட்டத்தை சமாளித்தனர். எனினும், கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. போலீஸாராலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஊரடங்கு அமலாக்க குழுவினர், பல இடங்களில் அவர்களது வாகனத்தில் இருந்தபடி, ஊரடங்கு விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தவாறு சென்றனர். பல கடைகளில் காலை 9 மணிக்கே காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன.
டீக்கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டதாலும், காலை 10 மணிக்கு மேல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாலும் நேற்று பால் முகவர்கள் குறைந்த அளவிலேயே பால் வாங்கி வைத்திருந்தனர். மேலும், இன்று பால் கடைகளும் அடைக்கப்படும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் 2 நாட்களுக்கும் சேர்த்து பால் வாங்கிச் சென்றனர். இதனால் காலை 8 மணிக்கேபல கடைகளில் பால் தீர்ந்துவிட்டது. 10 மணிக்கு கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால், நேற்று பொதுமக்களுக்கு போதிய அளவு பால் கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT