Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

இந்தியாவில் கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2.40 கோடியை கடந்தது : ஒரே நாளில் 3.43 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

நாட்டில் புதிதாக 3.43 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2.40 கோடியை கடந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,43,144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா மொத்த நோயாளிகள் 24 மில்லியனை கடந்துள்ளது. அதாவது மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 46,809 ஆக உள்ளது.

புதிதாக 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் தற்போது, 37 லட்சத்து 4,893 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 15.65 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 3,44,776 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 79,599 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் 82.5 சதவீதம் பேர் கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மே 13-ம் தேதி நிலவரப்படி நாட்டில் 31 கோடியே 13 லட்சத்து 24,100 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 லட்சத்து 75,515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு ஆலோசகர் வி.கே.பால் கூறும்போது, “இந்தியாவில் வரும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான 5 மாதங்களில் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். படிப்படியான முன்னேற்றத்தால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 300 கோடியாக இருக்கும்” என்றார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x