Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

நோயாளிகள், பயணிகளுக்கு இலவச சேவை - மதுரை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு : அரசின் போர்க்கால நடவடிக்கைக்கு துணைநிற்பதாக புகழாரம்

சென்னை

கரோனா நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குருராஜ் மற்றும்அன்புநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் குருராஜுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரை அனுப்பானடியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள தங்களின் மக்கள் சேவை பாராட்டுக்குரியது. கரோனாவின் முதல் அலையின் போதும், தற்போது மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் 2-வது அலையின் போதும் தங்களின் ஆட்டோ மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், பிற நோயாளிகளையும் மருத்துவமனைக்கு கட்டணமின்றி அழைத்துச் சென்று உயிர்காக்கும் உன்னத பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, நோயாளிகள், ரயில் பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்லும்தன்னார்வலராக தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றுதலுக்குரியது.

தங்கள் பணியால் ஈர்க்கப்பட்டு இப்பணியில் ஈடுபட்டுள்ள தங்களின் நண்பர் அன்புநாதனுக்கும் எனது பாராட்டுக்கள்.

பேரிடர் காலத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள போர்க்கால நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள சேவையை அரசின் சார்பில் பாராட்டுகிறேன்.

தாங்களும் குடும்பத்தாரும் நோய்தொற்றுக்கால பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x