Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் இடையே வான்வழி சண்டை - காஸாவில் 35 பேர், இஸ்ரேலில் 5 பேர் உயிரிழப்பு :

இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே நடந்த வான்வழி சண்டையில் காஸா பகுதியைச் சேர்ந்த 35 பேரும் இஸ்ரேலைச் சேர்ந்த 5 பேரும் உயிரிழந்தனர். இது கடந்த 2014-ல் நடந்த போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய சண்டை ஆகும்.

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா மசூதியில் முஸ்லிம்கள் கடந்த வாரம் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் இருதரப்புக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா நகரங்கள் மீது நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் 2 நகரங்களைச் சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல்ராணுவம் நேற்று அதிகாலையில் காஸா நகரத்தின் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்கியது. இதனால் நகரவாசிகள் பதற்றமடைந்தனர். ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தங்கியிருந்த கட்டிடங்கள் மற்றும் அந்த அமைப்பின் அலுவலக கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 5 பேரும், காசா பகுதியில் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2014-ல் நடந்த போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும். இதனால் அப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, ஐ.நா.சபையின் மத்திய கிழக்கு பகுதிக்கான அமைதி தூதர் டோர் வென்னஸ்லேண்ட் கூறும்போது, “இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இருதரப்பினரும் அமைதிகாக்க வேண்டும்” என்றார்.

கணவருடன் பேசிய கேரள பெண் மரணம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரித்தோடைச் சேர்ந்த சவுமியா சந்தோஷ் (32) இஸ்ரேலின் ஆஷ்கெலன் நகரில் (காஸா எல்லை அருகே) உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். இவரது கணவர் சந்தோஷ் குழந்தையுடன் சொந்த ஊரிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தோஷ் தனது மனைவி சவுமியாவுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காஸா பகுதியிலிருந்து குண்டுமழை பொழிவதால் வீட்டுக்குள் உள்ள பதுங்கு குழிக்குள் செல்ல உள்ளதாக கூறியுள்ளார். பேசிக்கொண்டிருந்தபோதே குண்டு விழுந்ததில் சவுமியாவின் குரல் நின்றுவிட்டது. அங்கிருந்து புகை கிளம்பியதை மட்டுமே சந்தோஷால் பார்க்க முடிந்துள்ளது. சிறிது நேரத்தில் வீடியோ இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஆஷ்கெலன் நகருக்கு அருகே வசித்து வரும் தனது சகோதரி ஷெர்லியை தொடர்புகொண்டு தகவலை கூறியுள்ளார். இதையடுத்து இதுபற்றிய தகவலை சேகரித்த ஷெர்லி, சந்தோஷை தொடர்புகொண்டு சவுமியா இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனால் சந்தோஷ் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. சவுமியாவின் உடலை கேரளாவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x