Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி : பாஜகவுக்கு திமுக பொதுச் செயலர் துரைமுருகன் கண்டனம்

புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜகமுயற்சிப்பதாக திமுக பொதுச் செயலரும், தமிழக நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, அங்குதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய பாஜக அரசு நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த நடவடிக்கைக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். 30உறுப்பினர்களைக் கொண்டதுதான் புதுச்சேரி சட்டப்பேரவை என தெளிவாக இருக்கும் நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இந்த நியமன எம்எல்ஏக்கள் மூலம் 33 ஆக உயர்த்தி, மக்கள் அளித்த தீர்ப்பைமாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்னும்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குள்ளாக தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக்கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை மத்தியஅரசு செய்து, பாஜகவின் எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது.

புதிதாக அமைந்திருக்கும் ஆட்சியின் ஸ்திரத்தன்மையை இந்த நியமன எம்எல்ஏக்களின் பலத்தை வைத்து சீர்குலைத்து, கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக செய்யும்முயற்சியே அது என்ற சந்தேகம்புதுச்சேரி மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

எனவே, 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். நியமன எம்எல்ஏக்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஸ்திரத்தன்மைக்கு ஆரம்பத்திலேயே ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியை கைவிட்டு, புதுச்சேரி மக்களின் நலனிலும், மாநிலத்தில் நிலவும் கரோனா பரவலைத்தடுத்திட வேண்டிய நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x