Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
கரோனா வைரஸை விரட்டுவதற்கு பசு சாண சிகிச்சையை செய்யக்கூடாது என்று டாக்டர்களும், விஞ்ஞானிகளும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கரோனா வைரசுக்கு எதிர்ப்பு மருந்தாக, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாரத்துக்கு ஒரு முறை, மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக் கொண்டு சிகிச்சை பெறுவதால், உடலில் கரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என, நம்பப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் கூறும்போது, “இதுபோன்ற பசுவின் சாணம், கோமியத்தைக் கொண்டு கரோனா வைரஸுக்கு சிகிச்சை செய்யக்கூடாது. இது வேறு பல நோய்கள் உடலில் புக வழிவகுத்துவிடும்.
பசுவின் சாணம், கோமியத்தைக் கொண்டு கரோனா வைரஸை விரட்டலாம் என எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆதாரமும் இதுவரை நம்மிடம் இல்லை. இது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் வைத்துச் செய்யப்படுகிறது.
இதனால் பல்வேறு பிரச்சினைகள் மனித உடம்பில் ஏற்பட வாய்ப்புள்ளது. பசுவின் சாணத்தை நுகர்வதாலோ, கோமியத்தைக் குடிப்பதாலோ வேறு பல நோய்கள் வரலாம். மிருகங்களிடமிருந்து மனிதர்களுக்கு பல்வேறு வித நோய்கள் பரலாம்” என்றார்.
பசுவின் சாணத்தைப் பூசிக் கொள்வதாலோ, கோமியத்தைக் குடிப்பதாலோ வேறு பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகளும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT