Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

வீடுகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் இலவசமாக டெலிவரி : ஓலா நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் வீடுகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டிகளை சப்ளை செய்யத் தயார் என ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத சூழலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கும் (கான்சன்ட்ரேட்டர்ஸ்) கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகளைப்பெறுவதற்கு வசதியாக ``கிவ் இந்தியா'' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு இலவசமாக டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அளிப்பதோடு, நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, இனிமேல் தேவைப்படாத சூழலில் அந்த இயந்திரங்களை அவர்களது வீடுகளிலிருந்து எடுத்து வரும் பணியையும் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுவோர் ஓலா செயலி (ஆப்) மூலமாக வேண்டுகோள் விடுக்கலாம். அவர்களது தேவை ஏற்கப்படும்பட்சத்தில் அவர்களின் வீட்டுக்கு செறிவூட்டிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, அதற்குரிய இயந்திரம், உபயோகத்திற்குப் பிறகு இலவசமாகவே எடுத்துச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது முதல் கட்டமாக பெங்களூருவில் இந்த வாரம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 500 செறிவூட்டிகள் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு இது நாட்டின் பிற பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

வீடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு நேரடியாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்த நடவடிக்கை மூலம் கிடைக்க வழியேற்படும் என்று ``கிவ் இந்தியா'' நிறுவனத்தின் நிறுவனர் அதுல் சதிஜா தெரிவித்துள்ளார்.

ஓலா நிறுவனம் தவிர, பிற ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களால் முடிந்த சேவைகளை மேற்கொண்டு வருகின்றன. உணவு டெலிவரியில் ஈடுபட்டுள்ள சோமோட்டோ நிறுவனம் கரோனா நோயாளிகளுக்கு உணவுகளை முன்னுரிமை அடிப்படையில் டெலிவரி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கென பிரத்யேக வசதியை தனது செயலியில் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x