Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தனியார் மருத்துவமனைகள், 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட ரூ.700 முதல் ரூ.1,500 வரை கட்டணமாக நிர்ணயித்துள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட இது 6 மடங்கு அதிகம். பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும்தனியார் பயன்பெறும் நோக்கில் மத்திய ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பேராயுதமாக பயன்படுத்த வேண்டிய தடுப்பூசி மருந்தை வணிகமாக்கி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு மத்தியபாஜக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது. கரோனா 2-வது அலைதீவிரம் அடைந்துள்ள நிலையில்தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த வேண்டியது மிக மிக அவசியமாகும். அப்போதுதான் 3-வது அலையை எதிர்கொள்ள முடியும்.

வெளிப்படைத் தன்மை

ஆனால், மோடி அரசோ எவ்வித வெளிப்படைத் தன்மையும் இன்றி அலட்சியமாக செயல்படுகிறது. தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க 10-க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக உள்ளன. அவர்களது உற்பத்தியை முடுக்கிவிட்டால் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்.

எனவே, கடந்தகால மத்திய ஆட்சியாளர்களின் அனுபவத்தை எடுத்துக்கொண்டு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். ஆமை வேகத்தில் செயல்படும் மோடி அரசு, இனியாவது முயல் வேகத்தில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x