Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

கோவை மாநகராட்சி பகுதி நகர் நல மையங்களில் - ஒரு நாள் விட்டு ஒரு நாள் கரோனா தடுப்பூசி : பற்றாக்குறையை சமாளிக்க புதிய நடைமுறை

கோவை மாநகராட்சி பகுதியில் தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க நகர் நல மையங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 2000 ஆயிரம் பேருக்கு மேல் மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் மாநகராட்சி பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில், பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் அவ்வப்போது தடைபட்டு வருகின்றன.

பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நகர் நல மையங்களில் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் சராசரியாக தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாளொன்றுக்கு 300 முதல் 350 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதனால் மாநகராட்சியில் மொத்தமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1500-ஐ தொட்டு விடுகிறது. தொற்று பரவலை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

அரசு சார்பில் மாநகராட்சிக்கு அளிக்கப்படும் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் உடனடியாக அனைவருக்கும் அவற்றைசெலுத்தும் பணிகள் நடைபெறுகின் றன. தடுப்பூசி பற்றாக்குறை என்பது பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி பற்றாக் குறையைச் சமாளிக்க தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் நகர் நல மையங்களில் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறோம்.

மேலும் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் கரோனா பரிசோதனை முகாம்கள் நடைபெறுகின்றன. இதன் மூலமாக தொற்றாளர்களைக் கண்டறியும் பணி துரிதமாக நடைபெறுகிறது. தவிர, மாநகராட்சிப்பகுதிகளில் முகக்கவசம் அணியா தவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களுக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது'’என்றனர்.

அங்காடிக்கு அபராதம்

மாநகராட்சி அதிகாரிகள் கோவை 100 அடி சாலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிகளை மீறி செயல்பட்ட தனியார் பல்பொருள் விற்பனை அங்காடிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x