Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM
வாணியம்பாடி: வாணியம்பாடியில் கரோனா விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.6,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் தினசரி ஆய்வு செய்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வர் தலைமையில் நகராட்சி உதவி பொறியாளர் சம்பத், சுகாதார ஆய்வாளர் அலி உட்பட நகராட்சி அலுவலர்கள் வாணியம்பாடி பகுதியில் நேற்று காலை திடீர் ஆய்வு நடத்தினர். வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.ரோடு, காதர்பேட்டை, நியூடவுன், புதூர் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.
மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் வழக்கமான கூட்டம் காணப்பட்டது. எந்தக் கடையிலும் பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதைக்கண்ட நகராட்சி அலுவலர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கரோனா தொற்றுக்கு வழி வகுத்த 16 கடை உரிமையாளர்களிடம் இருந்து 6,500 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT