Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

திருவண்ணாமலையில் - தற்காலிக அங்காடிகள் : செயல்பட தொடங்கின :

திருவண்ணாமலையில் கரோனா தொற்று பரவலை தடுக்க காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடிகள் தற்காலிகமாக இடமாற்றப்பட்டன. இதையொட்டி, அங்கு நேற்று விற்பனை தொடங்கியது.

திருவண்ணாமலை தேரடி வீதியில் ஜோதி பூக்கள் விற்பனை அங்காடி மற்றும் கடலை கடை சந்திப்பு அருகே காய்கறி அங்காடி செயல்பட்டு வந்தது. இட நெருக்கடி உள்ள நிலையில், மக்கள் அதிகளவில் கூடியதால், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை. இதனால், கரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.

இதையடுத்து, தி.மலை ஈசான்ய மைதானம் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகம் ஆகிய 2 இடங்களில் தற்காலிகமாக காய்கறி அங்காடி மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை அங்காடி நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடங்களில் காய்கறி மற்றும் பூக்கள் அங்காடி செயல்பட தொடங்கியது.

பேருந்து நிலையத்தில் செயல்பட்ட பூக்கள் விற்பனை அங்காடியில், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் நேற்று சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடினர். அவர்களை, காவல் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் எச்சரித்து, விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தினர்.

தற்காலிக காய்கறி அங்காடிகளிலும் பொதுமக்கள் கூடினர். காய்கறி மற்றும் பூக்கள் விற்பனை அங்காடியை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முகக்கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆரணி

ஆரணி புதிய பேருந்து நிலை யம் அருகே இயங்கி வந்த காய்கறி அங்காடியில் மக்கள் அதிகளவில் கூடியதால், தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரும்பேடு கூட்டுச் சாலை அருகே தற்காலிக காய்கறி அங்காடி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று(12-ம் தேதி) முதல் தற்காலிக காய்கறி அங்காடி செயல்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x