Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

முழு ஊரடங்கால் பாதிக்கப்படும் - தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவை : ஆலோசனைக் கூட்டத்தில் கொடிசியா தலைவர் கோரிக்கை

முழு ஊரடங்கால் பாதிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியாதார உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொடிசியா சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள தொழில் அமைப்புகள், வணிக சங்கங்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னையில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் கோவையில் இருந்தும் தொழில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொடிசியா சார்பில் அந்த அமைப்பின் தலைவர்எம்.வி.ரமேஷ்பாபு கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கொடிசியா தலைவர்எம்.வி.ரமேஷ்பாபு பேசியதாவது:

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். இருப்பினும் ஊரடங்கின்போது அத்தியாவசிய தொழிற்சாலைகளை இயக்க கோரியுள்ளோம். அப்படி பார்த்தால் கோவையில் உள்ள பாதி தொழில் நிறுவனங்கள் செயல்படும் நிலைதான் இருக்கும்.

இதில் செயல்படாமல் மூடி வைக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கடன் தவணை திரும்ப செலுத்துதல், கட்டிட வாடகை, தொழிலாளர்களை தக்க வைத்தல் என பல பிரச்சினைகள் உள்ளன.

இப்பிரச்சினைகளை சமாளிக்க தொடர்புடைய நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏதேனும் நிதியாதார உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் பெற்றுத் தர வேண்டும். கடந்தாண்டு கரோனா பாதிப்பை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதியுதவி போன்று, தற்போதும் வழங்கப்பட வேண்டும்.

தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாக விற்பனை நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரங்க ளில் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

மேலும் தற்போதுள்ள சூழலில் தொழில் முனைவோர் பலர் வங்கிகளில் மீண்டும் கடன் வாங்கும் சூழலில் உள்ளனர்.அவர்களுக்கான எம்.ஓ.டி. தொகையை குறைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கான ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க, மருத்துவ மனைகளுக்கு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் வாங்க நிதியுதவி திட்டங் களை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில், தொழில் துறையினரின் கோரிக் கைகளை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக ரமேஷ்பாபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x