Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததால் - 7 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி தீவிரம் :

கோவை

தேர்தல் நடத்தை விதிகள் முடிந்ததால், கைவசம் இருப்பில்உள்ள 7 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை விநியோகிக்கும் பணியை, மாவட்ட வழங்கல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்கள், ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என அரசு கடந்தாண்டு இறுதியில் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ஏராளமானோர் ரேஷன் கார்டு பெற, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இவ்வாறு அரசின் ஒப்புதல் பெற்று வரும் ஸ்மார்ட் கார்டுகள் தாலுகா வாரியாக, தொடர்புடையவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வந்தன. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், கடந்த பிப்ரவரி இறுதியில் இருந்து மே 2-ம் தேதி வரை யாருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்படவில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஸ்மார்ட்கார்டுகள் விநியோகிக்கும் பணிகள் மாவட்ட வழங்கல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மாவட்ட வழங்கல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாவட்ட நிர்வாகத்திடம் தற்போது 7 ஆயிரம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் கைவசம் உள்ளன. இவை, தாலுகா வாரியாக உள்ள வழங்கல்துறையின் மூலம்தொடர்புடையவர்களுக்கு கடந்த 3-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x