Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற மாலி நாட்டுப் பெண் :

மொராக்கோ மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையை பரிசோதிக்கும் செவிலியர்.

பமாகோ

மொராக்கோவில் மாலி நாட்டை சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. இது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான மாலியில் ஹலிமா சிசி (25) என்ற இளம்பெண் கர்ப்பம் தரித்திருந்தார். அவர்ஏழு குழந்தைகளை பெற்றெடுக்க இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க மாலியில் போதிய வசதிகள் இல்லாததால், மற்றொரு ஆப்பிரிக்க நாடானமொராக்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு காசபிளாங்கா நகரில் உள்ள அய்ன் போர்ஜா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஹலிவுமாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு அடுத்தடுத்து 9 குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து மாலி சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாலி பெண்ணுக்கு 7குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 குழந்தைகள் பிறந்துள்ளன. பெண் ஒருவர்9 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என கருதுகிறேன். 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள், அவர்களின் தாய் என அனைவரும் நலமுடன் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த 9 குழந்தைளும் தற்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன. நலமுடன் இருக்கும் அக்குழந்தைகளை மருத்துவ ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவமனையின் இயக்குநர் யூசுப் அலாயி கூறும்போது, “ஹலிமா குறித்து மாலி மருத்துவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன் எங்களை தொடர்புகொண்டனர். 9 குழந்தைகள் பிறக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஹலிமா, முன்கூட்டியே 30 வாரங்களில் குழந்தைகளை பிரசவித்துள்ளார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யமுடிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. குழந்தைகளின் எடை 500 கிராம் முதல் 1 கிலோ வரை உள்ளது” என்றார்.

உலக சாதனை புத்தகமாக கின்னஸ், “ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறந்ததே தற்போது உலக சாதனையாக உள்ளது. மொராக்கோவில் 9 குழந்தைகள் பிறந்திருப்பது குறித்து விரைவில் சென்று பார்வையிடுவோம்” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நாடியா சுலேமான் என்ற பெண் கடந்த 2009-ல்ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்றெடுத்ததே உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x