Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு - கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீத படுக்கைகளை காலியாக வைத்திருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் தனியார் மருத்துவமனைகள் அரசின் உத்தரவை கடைபிடிப்பதில்லை. கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

எனவே, அரசு உத்தரவின்படி தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீத படுக்கைகளை காலியாக வைக்கவும், கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து, சிகிச்சை கட்டணத்தை இணையதளத்தில் வெளியிடவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரெம்டிசிவிர் மருந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடும்போது, தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இருப்பு குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் சாதாரண மக்களுக்கும் படுக்கை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

எனவே, கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை மே 13-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஆக்சிஜன் தேவை

வெரோனிகா மேரி, தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் தயாரிக்கவும், செங்கல்பட்டு எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கவும் உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்க்கும்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையின் முக்கியத்துவம் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்தளவு உள்ளது? தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன? இதில் எத்தனை மையங்களை உடனடியாக செயல்படுத்த முடியும்? செங்கல்பட்டு எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா என்பன குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 19-க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x